பாஞ்சாலி சபதம் – 2.1.8

-மகாகவி பாரதி

சகாதேவனை அடுத்து அசுவ சாஸ்திர வல்லுநனான நகுலனையும் சூதில் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். அப்போது தனது பாதை தவறு என்று சிறு ஞானோதயம் தருமனுக்கு ஏற்படுகிறது. அதை உணர்ந்த சகுனி, “சிற்றன்னை மாத்ரிக்குப் பிறந்தவர்கள் என்பதால் சகாதேவனையும், நகுலனையும் வைத்து இழந்தாய் போலும். குந்தியின் பிள்ளைகளான உன் உடன் பிறந்தவர்களான பீமனையும் அர்ச்சுணனையும் சூதில் வைக்கத் தயங்கினை போலும்” என்று எள்ளி நகையாடுகிறான்.  

இரண்டாம் பாகம்

2.1. அடிமைச் சருக்கம்

2.1.8. நகுலனை இழத்தல்

நகுலனை வைத்தும் இழந்திட்டான்; – அங்கு
      நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி – வந்து
புகுவது போலவன் புந்தியில் – ‘என்ன
      புன்மை செய்தோம்?’ என எண்ணினான்- அவ்வெண்ணம்
மிகுவதன் முன்பு சகுனியும் – ‘ஐய,
      வேறொரு தாயிற் பிறந்தவர் – வைக்கத்
தகுவரென்றிந்தச் சிறுவரை – வைத்துத்
      தாயத்தி லேஇழந் திட்டனை. 26

‘திண்ணிய வீமனும் பார்த்தனும் – குந்தி
      தேவியின் மக்களுனையொத்தே – நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர் – தமைக்
      காட்டுதற் கஞ்சினை போலும்நீ?’ – என்று
புண்ணியம் மிக்க தருமனை – அந்தப்
      புல்லன் வினவிய போதினில், – தர்மன்
துண்ணென வெஞ்சின மெய்தியே – ‘அட,
      சூதில் அரசிழந் தேகினும், 27

$$$

Leave a comment