பாரதியின் தனிப்பாடல் – 2

-மகாகவி பாரதி

2. அந்திப் பொழுது

காவென்று கத்திடுங் காக்கை- என்தன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில்- இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே;- சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை – விண்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். 1

தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி- அது
‘ஜிவ்’ வென்று விண்ணிடை யூசலிட் டேகும்.
மன்னப் பருந்தொ ரிரண்டு- மெல்ல
வட்ட மிட்டுப்பின் நெடுந்தொலை போகும்,
பின்னர் தெருவிலார் சேவல்- அதன்
பேச்சினி லே‘சக்தி வேல்’ என்று கூவும். 2

செவ்வொளி வானில் மறைந்தே- இளந்
தேன்நில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச,- விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள்.
செவ்விது,செவ்விது, பெண்மை!- ஆ!
செவ்விது, செவ்விது, செவ்விது காதல்!

காதலி னாலுயிர் தோன்றும்;- இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காலி னாலறி வெய்தும்- இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப்- பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,- அவள்
வீணைக் குரலிலோர் பாட்டிசைத் திட்டாள்.

காதலியின் பாட்டு

கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s